கீழ்பாக்கத்தில் இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி பலி.. தந்தையை காண தாயுடன் வந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!

 

கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள துணிக்கடையின் இரும்பு கேட் விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் மூன்று அடுக்கு கட்டிடத்தில் பிரபல துணிக்கடையானது இயங்கி வருகிறது. இந்த துணிக்கடையில் காவலாளியாக பணியாற்றி வருபவர் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சங்கர். கடந்த ஒரு மாதமாக அந்த கடையில் சங்கர் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு வாணி என்ற மனைவியும் ஹரிணி ஸ்ரீ (5) என்ற மகளும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். தினமும் சங்கர் வேலையை முடித்துவிட்டு தனது மனைவி மற்றும் மகளுடன் இந்தப் பகுதியிலிருந்து கிளம்பி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

நேற்று வழக்கம்போல் மனைவி வாணி, ஐந்து வயது மகள் ஹரிணி ஆகியவரை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்பொழுது துணிக்கடையின் வாசலில் இருக்கக்கூடிய இரும்பு கேட் (ஸ்லைடிங் கேட்) அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் கவனிக்காமல் ஸ்லைடிங் கேட்டு முழுமையாக திறந்ததால் இரும்பு கேட்டானது சிறுமி மேலே விழுந்தது.

இந்த விபத்தில் காயமடைந்த சிறுமி உடனடியாக ஆட்டோவில் ஏற்றப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட காரணமாக துணிக்கடையானது மூடப்பட்டுள்ளது.

கடையின் மேலாளர் மற்றும் பணியில் இருந்த பொழுது கேட்டை சரியாக மூடாத மற்றொரு காவலாளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.