40 வயது பெண்ணை வாகனத்தில் கடத்தி சென்று பலாத்காரம்... ரவடி முருகன் உள்பட 2 பேர் கைது!

 

தூத்துக்குடியில் நடந்து சென்ற பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், கடந்த 14-ம் தேதி மாநகரப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற கட்டை முருகன் (27), அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த கோகுல் ராம் (19) ஆகிய இருவரும் அந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி வழிமறித்தனர்.

கத்தியால் குத்திவிடுவதாக மிரட்டி அந்தப் பெண்ணை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தருவைக்குளம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்றதும் முருகன் என்ற கட்டை முருகன் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தார். அதன்பின் அந்தப் பெண்ணை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கோகுல் ராம், அந்த பெண்ணின் செல்போனில் தொடர்புகொண்டு தன் ஆசைக்கு இணங்குமாறும், இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கட்டை முருகனையும், கோகுல் ராமையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டிருக்கும் முருகன் மீது, தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு என 16 வழக்குகளும், சிப்காட், விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கும் உள்ளது.

முன்னதாக இவ்வழக்கில் முருகன் தேடப்பட்டு வந்த போது தாளமுத்து நகர் பகுதியில் ஒருவரை அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பினார். அப்போது அவரை தனிப்படை போலீசார் துரத்தினர். இதனால் முருகன் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் அவரது கை ஒடிந்தது குறிப்பிடத்தக்கது.