தந்தை ஓட்டிய டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தை பலி!! உழவு பணி செய்த போது சோகம்!

 

செஞ்சி அருகே தந்தை ஓட்டிய டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வேலந்தாங்கல் அருகே உள்ள மதுரா நார்சாம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் சவுரியப்பன். இவரது மகன் அருள் என்கிற அந்தோணி ஆரோக்கியராஜ். இவர் நேற்று தனது உறவினர் டிராக்டரில், நிலத்தை நெல் நடவு பணிக்காக தயார் செய்வதற்கு உழவு பணி மேற்கொண்டார். 

அப்போது, தனது குழந்தையான ஐஸ்வர்யா (3) என்பவரையும் டிராக்டரில் அமர வைத்திருந்த நிலையில், திடீரென குழந்தை ஐஸ்வர்யா டிராக்டரில் இருந்து தவறி, கீழே விழுந்தாள். அதில், டிராக்டரில் இருந்த இரும்பு சக்கரத்தில் சிக்கிய, குழந்தை படுகாயம் அடைந்தது. இதனால், பதறி போன அருள் தனது மகளை தூக்கிகொண்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். 

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே குழந்தை ஐஸ்வர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்டு அவரது தந்தை மற்றும் தாய் கதறி அழுதனர். இதையடுத்து இது குறித்து நல்லாண் பிள்ளை பெற்றாள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

புகாரின் பேரில் நல்லாண் பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையின் கண் எதிரே, டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.