சூளகிரி அருகே குட்டையில் மூழ்கி 10 வயது சிறுமி பலி!! விளையாடிய போது நேர்ந்த சோகம்!

 

கிருஷ்ணகிரி அருகே குட்டையில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள அலேசீபம் கிராமத்தில் வசித்து வருபவர் சிவசங்கர். திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இவரது மகள் நைனா ஸ்ரீ (10). இவர் அதே கிராமத்தில் உள்ள ஆங்கிலப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று நைனா ஸ்ரீ வீட்டின் அருகே உள்ள குமார் என்பவருக்கு சொந்தமான விளை நிலத்தில் உள்ள குட்டையின் அருகே தோழியுடன் விளையாடி கொண்டி ருந்தார். அப்போது நைனா ஸ்ரீ எதிர்பாராத விதமாக தவறி குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் இறந்த நைனாஸ்ரீ உடலை மீட்டனர். 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் மரணம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.