மின்சாரம் தாக்கி 4-ம் வகுப்பு மாணவன் பலி... கரும்பை வைத்து விளையாடியபோது விபரீதம்!!

 

சென்னை அம்பத்தூரில் கரும்பை வைத்து விளையாடியபோது உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி 4-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை அம்பத்தூர் சண்முகபுரம், அன்னை இந்திரா நகரில் வசித்து வருபவர் ராம்குமார் (39). இவர், கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர், மூலக்கடை பகுதியில் உள்ள ஏற்றுமதி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு ஆகாஷ் (9), சைலேஷ் (4) என 2 மகன்கள் உள்ளனர். இருவரும் அம்பத்தூர் சண்முகபுரம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களில் ஆகாஷ், 4-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் ஆகாஷ், கடந்த 13-ம் தேதி வீட்டின் மாடியில் கரும்பை வைத்து விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் கரும்பு உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட ஆகாஷ் படுகாயம் அடைந்தான். சுமார் 80 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.