பாலீஷ் செய்வதாக கூறி 3 சவரன் தங்க நகையுடன் தப்பியோடிய வடமாநில இளைஞர்கள்..! ராணிப்பேட்டை அருகே பரபரப்பு

 

ஆற்காடு அருகே தங்க நகையை பாலீஷ் செய்வதாக கூறி 3 சவரன் தங்க செயினை வடமாநில இளைஞர்கள் வாங்கி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள தாழனூர் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி ரமேஷ். இவரது மனைவி தேவி (40). இவர், நேற்று காலை வீட்டில் இருந்தபோது, 2 இளைஞர்கள் வந்து தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினர். அதற்கு தேவி, அதெல்லாம் வேண்டாம், எனக் கூறினார். 

எனினும், வாலிபர்கள் கட்டாயப்படுத்தி அவரிடம் இருந்து 3 சவரன் தங்க ஜெயினை வாங்கி, அதன் மீது ஆசிட் திராவகத்தை ஊற்றினர். அதில் அந்த தங்க ஜெயின் கரைந்து துண்டு துண்டாக சிதைந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தேவி கூச்சலிட்டு சத்தம் போட்டுள்ளாா். உடனே அங்கிருந்து 2 இளைஞர்களும் தப்பியோடினர். 

தேவியின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று 2 இளைஞர்களையும் மடக்கி பிடித்து, ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் 2 பேரும் வடமாநிலமான பீகார் மாநிலம் மத்திய புரஜில்லா ராட்டா பகுதியை சேர்ந்த மிதுன்குமார் (21), முகேஷ்குமார் (24) என்பது தெரிய வந்தது. 

தங்க ஜெயினுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறி ஏமாற்றி ஜெயினை பறித்துக்கொண்டு ஓடிய வடமாநில இளைஞர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வடமாநில கொள்ளையர்கள் மீது வழக்குப் பதிவு செய்து ஆசிட் திராவக பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் சமீப நாட்களாக கொள்ளை சம்பவங்களில் வட இந்தியாவை சேர்ந்த கொள்ளைகும்பல்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.