ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நகைக் கடையில் நுாதன திருட்டு.. மாட்டி கொடுத்த சிசிடிவி காட்சி!!

 

சென்னையை அடுத்த மாதவரத்தில் வாடிக்கையாளர்கள் போல் நடித்து நகை கடையில் தங்க சங்கிலி திருடிய தாய், மகள் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெரம்பூர் பொன்னுசாமி நகரைச் சேர்ந்தவர் முகமது நசீர் (51). இவர் மாதவரம் அடுத்த மூலக்கடை பகுதியில் பாத்திமா ஜுவல்லரி என்ற நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 25ம் தேதி இவரது கடைக்குச் சென்ற இரு பெண்கள் உட்பட மூவர், நகை வாங்குவது போல் நடித்து, அவற்றை பார்வையிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் நகை எதுவும் வாங்காமல் சென்றனர்.

இதையடுத்து நகைக்கடையின் உரிமையாளர் முகமது நசீர் நகைகளை சரிபார்த்த போது, இரண்டு சவரன் நகை காணாமல் போனது தெரியவந்தது. பின்னர் கடையிலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.

அப்போது சற்று நேரத்திற்கு முன்பு நகைவாங்க வந்த கும்பல் நகையைத் திருடும் காட்சிப் பதிவாகியிருந்தது. அவர்களது முகவரியை கண்டுபிடித்து, கடை ஊழியர்கள் சென்று விசாரித்த போது, தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மீது நகைக்கடை உரிமையாளர் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மாதவரம் பொன்னியம்மன் மேடு, ராய் நகரைச் சேர்ந்த சர்மிளா (42), அவரது மகள் ஜெயஸ்ரீ (24), மகன் சசிதரன் (21) ஆகியோர் நகை திருடியது உறுதியானது. இதனையடுத்து தாய் ஷர்மிளா மகள் ஜெயஸ்ரீ மகன் சசிதரன் ஆகிய மூவரையும் போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.