3 நாட்கள் தொடர் விடுமுறை.. குஷியில் மாணவர்கள்!

 

தஞ்சாவூரில் ஆயுதபூஜை , விஜயதசமி மற்றும் சதய விழாவை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அக்டோபர் 23ம் தேதி (திங்கட்கிழமை) ஆயுதபூஜை, அக்டோபர் 24-ம் தேதி விஜயதசமி பண்டிகைகள் கொணடாடப்பட உள்ளது. இப்பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 25ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தின் அன்று, ராஜராஜ சோழனுக்கு சதய விழா என்ற பெயரில், இரண்டு நாட்கள் சிறப்பாக விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்தாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 -ஆவது சதய விழா வருகிற 24 -ஆம் தேதி தொடங்குகிறது. சதய நட்சத்திர நாளான 25-ம் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழாவை முன்னிட்டு வருகிற 25-ம் (புதன்கிழமை) தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை வரவுள்ளது.