திருமணமான 3 நாட்களில் புது மாப்பிள்ளை பரிதாப பலி... மதுபோதையில் உயிரிழந்த சோகம்!!

 

சென்னையில் திருமணமான மூன்று நாட்களில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் செல்லியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் (26). கார் டிரைவரான இவருக்கும் சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூவைச் சேர்ந்த ஷோபனா என்பவருடன் கடந்த 26-ம் தேதி திருமணம் நடைபெற்றது. புதுமண ஜோடிகளான இருவரும் செனாய் நகரில் இருக்கும் ஷோபனாவின் தாயார் வீட்டுக்கு விருந்துக்கு சென்றிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 28-ம் தேதி இரவு நேரத்தில் தனது நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் மணிகண்டன் மாமியார் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். புல்லா அவென்யூ அருகே வந்தபோது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து மணிகண்டன் கீழே விழுந்தார்.

இதில் தலை மற்றும் முகத்தில் பலத்தை காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மணிகண்டன் மது போதையில் இருந்ததால் இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது. எதிர்கால வாழ்க்கை குறித்த பல கனவுகளுடன் இருந்த மணிகண்டன் விபத்தில் உயிரிழந்தது அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இடையே சோகத்தை உண்டாக்கியுள்ளது.