தனியார் மருத்துவமனையில் 2 வயது குழந்தை திடீர் மரணம்.. கதறி அழும் பெற்றோர்!

 

சென்னையில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ஷாலினி. இந்த தம்பதிக்கு 2 வயதில் தேஜாஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த 2 நாட்களாக குழந்தை தேஜாஸ்ரீக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று இரவு சுமார் 12 மணியளவில் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அப்போது முன்பணமாக 50 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று மருத்துவமனை சார்பில் தெரிவித்தனர். அவர்கள் 10 ஆயிரம் பணத்தை செலுத்தி குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் குழந்தை நன்றாக இருப்பதாகவும் 5 அல்லது 6 நாட்கள் இங்கு சிகிச்சை பெற வேண்டும் அதற்கு 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை செலவாகும் என்று கூறியுள்ளனர்.

அதற்கு குழந்தையின் பெற்றோர் தனக்கு தெரிந்த அரசு மருத்துவரிடம் தொலைபேசி பேச வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு தனியார் மருத்துவமனை மருத்துவர் அவர்களிடம் பேச முடியாது என்றும் உடனடியாக 10 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் தங்களிடம் அவ்வளவு பணமில்லை என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, உங்கள் குழந்தை இறந்துவிட்டது உடனே வந்து எடுத்து செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளனர். இதனால் இறந்த குழந்தையின் உறவினர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக குரோம்பேட்டை உதவி ஆணையாளர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். 

இருந்தபோதிலும் குழந்தையின் பெற்றோர் தரப்பில் புகார் அளித்துள்ளனர். அதாவது 10 லட்சம் கேட்டு தரமறுத்ததாக ஏற்கனவே இறந்த குழந்தைக்கு மருத்துவம் பார்ப்பதற்காக 10 லட்சம் கேட்டதாக புகாரில் தெரிவித்துள்ளனர். அதுமட்டமில்லாமல் குழந்தையின் உடலை வெளியே கொண்டு வந்தபோது உறவினர்கள் குழந்தையை சுற்றி அழுத காட்சி மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.