ஆற்றில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!! தஞ்சாவூர் அருகே சோகம்

 

தஞ்சாவூர் அருகே ஆற்றில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே வள்ளிகொல்லை காடு கிராமத்தில் வசித்து வருபவர் திருமாறன். இவரது மகன் வைரமுத்து (19). இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவரது மகன் நித்திஷ் என்கிற வைரக்குமார் (16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11 வகுப்பு படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் சேர்ந்து இன்று மதியம் கருங்குளம் நசுனி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நித்திஷ் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினார். இவரை காப்பாற்ற சென்ற வைரமுத்துவும் ஆற்றில் மூழ்கியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்த இளைஞகர்கள் ஆற்றில் இறங்கி மாணவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் மாணவர் வைரமுத்து இறந்த நிலையில் மீட்கப்பட்ட நிலையில் நிதிஷ் கிடைக்கவில்லை. இதனை அடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் மூழ்கிய மாணவர் நித்திஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேர தேடுதலுக்கு பின்னர் மாணவர் நித்திஷை தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த நிலையில் மீட்டனர்.

இதுகுறித்து அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த அதிராம்பட்டினம் போலீசார் உயிரிழந்த மாணவர்களின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.