ஒதுக்கி வைத்த சக மாணவிகள்... மன உளைச்சலால் மருத்துவக்கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி!! சென்னையில் பரபரப்பு

 

சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவிகள் மெர்குரி சல்பேட் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வேப்பேரி பகுதியில் தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி விடுதியில் மதுரை மற்றும் வேலூரைச் சேர்ந்த 2 மாணவிகள் தங்கி 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர். நெருங்கிய தோழிகளான இருவரும் மாணவர்களிடம் சகஜகமாக பழகி வந்ததாக தெரிகிறது. இதனால் அவர்கள் இருவரையும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தவறானவர்கள் என்று கருதி அவர்களிடம் யாரும் பேசாமல் ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதன் காரணமாக மன உளைச்சல் இருந்த இரு மாணவிகளில் ஒருவர் நேற்று மாலை கல்லூரி ஆய்வுகூடத்தில் இருந்து மெர்குரி சல்பேட் என்ற வேதி பொருளை கொண்டு வந்து விடுதி அறையில் வைத்து தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அவரது நெருங்கிய தோழியான மற்றொரு மாணவியும், ‘நீ இல்லாத உலகத்தில் நானும் இருக்க விரும்பவில்லை’ எனக் கூறி அதே மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அந்த அறைக்கு வந்த மற்றொரு மாணவி, அறையில் இரு மாணவிகளும் மயங்கி கிடப்பதைகு கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்ததை அடுத்து இருவரும் நலமுடன் உள்ளனர்.

தகவல் அறிந்த மருத்துவமனை நிர்வாகம் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், தங்களை தவறானவர்கள் என்று கூறி சக மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள் தங்களிடம் பேசாமல் ஓதுக்கி வைத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் இது குறித்து சம்பந்தபட்ட மாணவிகள், ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும் மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவிகள் மெர்குரி சல்பேட் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.