இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 பேர் உடல் கருகி பலி... வீட்டில் வெடித்த ஃபிரிட்ஜ் வெடித்தால் விபரீதம்!!

 

பொள்ளாச்சி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த சபரிநாத் (40). இவர் சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனியாக வசித்து வந்தார். நல்லூர் கிராமத்தில் உள்ள இவரது வீட்டில் கணவனை இழந்த பெண் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

சென்னையில் பணியாற்றி வரும் சபரிநாத் அவ்வப்போது விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சபரிநாத் கடந்த 7-ம் தேதியும் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த அவருக்கு, கீழ் வீட்டில் குடியிருக்கும் சாந்தி சமையல் செய்து கொடுக்க மேல் பகுதிக்கு சென்றுள்ளார். இருவரும் கதவை பூட்டி விட்டு உள்ளே சமைத்து கொண்டிருந்த வேலையில் திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

இதனால் பதறி போன அக்கம் பக்கத்தினர் என்னவென்று பார்த்த போது, வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. மேலும் சபரிநாத் மற்றும் சாந்தி இருவரும் உடலில் தீ பற்றிய நிலையில் கதறி கொண்டிருந்தனர். ஆனால், கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால் பொதுமக்களால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. செய்வதறியாது திகைத்த அக்கம்பத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, இருவரும் உடல் கருகிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி மின் கசிவு காரணமாக வெடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக நல்லூர் பாலக்காடு சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.