சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 சிறுமிகள் பலி... துக்க வீட்டிற்கு சென்று திரும்பியபோது நிகழ்ந்த சோகம்!!

 

துக்க வீட்டிற்கு சென்று திரும்பிய கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமதுசலீம். இவரது மகள் தபசு பாத்திமா (15), இவர்களது உறவினர் கோட்டூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரசாக் இவரது மகள் சுமையா பாத்திமா (17). இவர்கள் குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலம், வஜ்ர கருவு பகுதியில் உறவினரின் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். 

இந்த நிலையில் இன்று காலை சென்னை நோக்கி வந்த காரில் 6 பேர் இருந்தனர். சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் விஜய் (32) காரை ஓட்டி வந்தார். இன்று காலை ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அருகே கார் வந்த போது எதிர்பாராத விதமாக, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. 

இதில் காரில் இருந்த சிறுமிகள் தபசு பாத்திமா, சுமையா பாத்திமா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 4 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.