மார்ச் 8-ம் தேதி வரை இந்த 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு!! என்ன காரணம்?

 

லால்குடி அருகே உள்ள 4 கிராமங்களில் மார்ச் 8-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் அப்பகுதியை சுற்றியுள்ள ஜங்கம ராஜபுரம், மங்கம்மாள் புரம், கீழ அன்பில் ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு திருவிழாவிற்கு உதவி கலெக்டர் அனுமதி மறுத்துள்ளார். சாமி திருஉலா பிரச்சனையில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை நீதிமன்றம் வரை ஏற்கனவே சென்றுள்ளது. இதனால் அங்கு இரு தரப்பினருக்கு இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை காணப்படுகிறது.

இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள  அன்பில், கீழ் அன்பில், ஜங்கம ராஜபுரம், மங்கம்மாள் புரம் ஆகிய 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்பில் கிராமத்தில் உள்ள ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் திருவிழா பிரச்சனை எதிரொலியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் திருவிழாவில் மாசி திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை பெருமளவு உள்ளதால், லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். இது இன்று பிப்ரவரி 28 முதல் மார்ச் 8-ம் தேதி பிற்பகல் 2 மணி வரை இந்த 144 தடை உத்தரவானது அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.