தேங்கிய மழை நீரில் தவறி விழுந்து 11 வயது சிறுவன் பலி.. விளையாட சென்ற போது நேர்ந்த சோகம்

 

தாம்பரத்தில் மழை நீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானடோரியம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் விஷ்வா (11). இவர், ராமகிருஷ்ணபுரம் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை சானடோரியம் மேம்பாலம் அருகே தனியார் பள்ளிக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள ரயில்வே இடத்தில், 3 நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளார்.

அப்போது, அங்கு மழை நீர் தேங்கி நின்ற குழியில் எதிர்பாரத விதமாக சிறுவன் விஷ்வா தவறி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரவித்தனர். அவர்கள் உடனடியாக தாம்பரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்புத்துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி சிறுவனின் உடலை மீட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிட்லபாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் சிறுவன் விஷ்வா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.