மகாராஷ்டிராவில் சொகுசு கார் மோதி இளைஞர் பலி.. எம்எல்ஏ உறவினர் கைது

 

மகாராஷ்டிராவில் எம்எல்ஏ உறவினர் ஓட்டிய சொகுசு கார் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டம் ஹாத் தொகுதி தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ திலீப் மோகிதி பட்டேல். இவரது உறவினர் மயூர் மோகிதி. இந்நிலையில், மயூர் மோகிதி தனது சொகுசு காரில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் புனே - நாசிக் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அவர் மஞ்சர் என்ற கிராமத்திற்கு செல்ல நெடுஞ்சாலையில் தவறான பாதையில் காரை ஓட்டியுள்ளார். அப்போது சாலையில் எதிரே வந்த  பைக் மீது மயூர் மோகிதி ஓட்டிய சொகுசு கார் அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் பைக்கில் பயணம் செய்த ஓம் பஹ்லிரோ (19) என்ற இளைஞர் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார், உயிரிழந்த இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய எம்எல்ஏவின் உறவினர் மயூர் மோகிதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.