உன்னவிட நல்லா பாத்துக்குறான் என வெறுப்பேற்றிய மனைவி.. ஓட ஓட வெட்டிக்கொன்ற முன்னாள் கணவர்!

 

கர்நாடகாவில் திருமணமான ஒரு மாதத்தில் புது காதலனுடன் ஓடிய இளம்பெண் முன்னாள் கணவனால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் கொக்கடனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹீனா கவுசர் (19). இவர், 24 வயதான தௌஃபிக் காடி என்பவரை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அதன்பின், நர்சிங் கல்லூரியில் சேர்ந்து படித்த ஹீனாவிற்கு, அவரது கணவரின் நண்பரான யாசின் பகோட்டின் நட்பு கிடைத்துள்ளது.

யாசினின் கலர்ஃபுல் இன்ஸ்டா ரீல்ஸ்களால் ஈர்க்கப்பட்ட ஹீனா, அவருடன் அதிகமான நேரத்தை செல்போனில் கழித்துள்ளார். நாளடைவில் தனிமையில் சந்திப்பது, பல்வேறு இடங்களுக்கு சுற்றுவது என சென்று தகாத உறவில் சென்றது. தௌஃபிக்கிற்கு தெரியவர, மனைவியையும் - நண்பனையும் அழைத்து கண்டித்திருக்கிறார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள், வீடும் 500 மீட்டர் தூரத்தில் இருந்ததால், ரகசிய ஜோடியின் சீக்ரெட் காதலுக்கு தடை போட முடியவில்லை.

கணவனின் கண்டிப்பு அதிகரித்ததால் யாசினின் நம்பிக்கையின் பேரில் ஹீனா வீட்டை விட்டு வெளியேறி அவருடன் சென்றுவிட்டார். 20 நாட்கள் தலைமறைவாக குடும்பம் நடத்தியவர்கள், ஊர் பெரியவர்களிடம் பேசி மீண்டும் திரும்பினர். ஜமாத்தில் மூன்று பேரை அழைத்து சமரசம் செய்தபோது ஹீனா, யாசினுடன் செல்வதாக திட்டவட்டமாக கூறினார். மனம் உடைந்து போன தௌஃபிக், இருவரின் காதலுக்கும் தடையாக இருக்க மாட்டேன் எனக்கூறி தலாக் கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

பின்னர் யாசின் மற்றும் ஹீனா இருவரும் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். புதுஜோடி இருவரும் ஒரு மாதமாக, கொக்கடனூர் கிராமத்தின் புறநகரில் உள்ள ஜாதவ் பண்ணையில் வசித்து வந்தனர். கிராமத்தில் யல்லம்மா தேவியின் திருவிழா நடைபெற்றது. அதில் முன்னாள் கணவர் தௌஃபிக்கும், ஹீனாவும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். ‘உன்னை விட, யாசின் என்னை நன்றாக பார்த்து கொள்கிறான், நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தெரியுமா’, எனக்கூறி தௌஃபிக்கை சூடேற்றி இருக்கிறார்.

ஹீனாவின் வார்த்தைகள் தௌஃபிக்கை ஆத்திரக்காரனாக மாற்றியது. கையில் அரிவாளுடன் புறப்பட்டு சென்றவர், ஹீனாவின் வீடு புகுந்து ஆக்ரோஷத்தில் ஈடுபட்டுள்ளார். ஹீனா, அவரது புது கணவன் யாசின் ஆகிய இருவரையும் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். சம்பவத்தை தடுக்க முயன்ற யாசினின் தாய் அமினாபாய் மற்றும் உறவினர் முஸ்தபா ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த யாசினின் தாய் மற்றும் உறவினரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதை அடுத்து, இரட்டை கொலை தொடர்பாக வழக்குப் பதிந்த போலீசார், தலைமறைவாக இருந்த தௌஃபிக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.