பல ஆண்டுகளாக மனஅழுத்ததில் இருந்த பெண் மருத்துவர்.. கடல் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை!

 

மகாராஷ்டிராவில் பெண் டாக்டர் ஒருவர் மும்பை கடல் பாலத்தில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியைச் சேர்ந்தவர் கிஞ்சல் ஷா (43). டாக்டரான இவர் தனது தந்தையுடன் வசித்து வந்தார். இவர் கடந்த 18-ம் தேதி வீட்டருகே டாக்சியில் ஏறி பயணம் செய்தார். சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட மும்பை - நவிமும்பை அடல் சேது கடல் பாலம் வழியாக செல்லுமாறு டிரைவரிடம் தெரிவித்தார்.

அதன்படி டாக்சி டிரைவர் கடல் பாலம் வழியாக டாக்சியை ஓட்டி சென்றார். பாலத்தில் நடுவழியில் டாக்சியை நிறுத்துமாறு டிரைவரிடம் பெண் டாக்டர் கேட்டுக் கொண்டார். ஆனால் கடல் பாலத்தில் டாக்சியை நிறுத்த அனுமதி கிடையாது என டிரைவர் தெரிவித்தார்.

ஆனால் பெண் டாக்டர் கிஞ்சல் ஷா வலுக்கட்டாயமாக டாக்சியை நிறுத்த செய்தார். பின்னர் டாக்சியில் இருந்து கீழே இறங்கிய அவர், திடீரென பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி கடலுக்குள் குதித்துவிட்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டாக்சி டிரைவர் நவிமும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கடலோர காவல் படை, மீட்பு படையினர் கடலில் குதித்த பெண்ணை தேடி வந்தனர்.

இதற்கிடையே தான் 8 வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்ததால், அடல் சேது பாலத்தில் இருந்து கடலில் குதித்து உயிரை மாய்த்து கொள்வதாக அவர் வீட்டில் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றி, தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.