கோடாரியால் கணவனை வெட்டி கொன்ற மனைவி.. 5 துண்டுகளாக வெட்டி கால்வாயில் வீசிய கொடூரம்!!

 

உத்தரபிரதேசத்தில் கோடாரியால் கணவனை 5 துண்டுகளாக மனைவி கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள கஜ்ரவ்லா பகுதியை சேர்ந்தவர் ராம்பால். இவரது மனைவி துலாரோ தேவி. இந்த தம்பதிக்கு சோம்பால் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் திருமணமான நிலையில் பக்கத்து கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். துலாரோ தேவிக்கும், ராம்பாலின் நண்பருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், ராம்பாலுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தேவி ராம்பாலின் நண்பருடனே சென்று வாழத் தொடங்கிய நிலையில், கடந்த மாதம் மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனிடையே, சில தினங்களுக்கு முன் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த துலாரோ தேவி தூங்கிக் கொண்டிருந்த கணவனை கட்டிலோடு கட்டி வைத்து கோடாரியால் வெட்டி கொன்றார். இதனையடுத்து, உடலை 5 பாகங்களாக வெட்டி, அருகே உள்ள ஆற்றுக் கால்வாயில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளார். மேலும், தனது மகனிடம், கணவரை சில தினங்களாக காணவில்லை என கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சோம்பால் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் துலாரோ தேவி, கணவனை கொன்றதை ஒப்புக்கொண்டார். மேலும், உடலை 5 பாகங்களாக வெட்டி கால்வாயில் வீசியதாகவும் தெரிவித்தார்.

அவரை கைது செய்த போலீசார், அந்த ஊருக்கு வெளியே உள்ள கால்வாயில் வீசப்பட்ட ராம்பாலின் உடல் பாகங்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக மனைவியே, கணவரைக் கொன்று, 5 துண்டுகளாக வெட்டி கால்வாயில் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.