முகத்தில் குத்தி கணவனை கொன்ற மனைவி.. துபாய்க்கு அழைத்துச் செல்லாததால் ஆத்திரம்!

 

மகாராஷ்டிராவில் பிறந்தநாளை கொண்டாட துபாய்க்கு அழைத்துச் செல்லாததால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனின் முகத்தில் குத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் வானவ்டி பகுதியில் உள்ள ஆடம்பர குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் நிகில் கண்ணா (36). இவர் தொழிலதிபராக உள்ளார். இவருக்கும் ரேணுகா (38) என்ற பெண்ணை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் ரேணுகா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட துபாய்க்கு அழைத்துச் செல்லுமாறு நிகிலிடம் கூறியுள்ளார். ஆனால் நிகில், ரேணுகாவை துபாய்க்கு அழைத்துச் செல்லவில்லை. மேலும் ரேணுகாவின் பிறந்தநாளுக்கு அவருக்கு எந்த விலை உயர்ந்த பரிசுகளையும் நிகில் வழங்கவில்லை.

இதனால் கோபத்தில் இருந்த ரேணுகா நேற்று மதியம் நிகிலுடன் சண்டையிட்டுள்ளார். சண்டையின்போது ரேணுகா, நிகிலின் முகத்தில் குத்தினார். இதில் நிகிலின் மூக்கு மற்றும் சில பற்கள் உடைந்தன. அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், சுயநினைவை இழந்து விழுந்த நிகில் உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நிகிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ரேணுகா மீது ஐபிசி 302 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.