வந்தே பாரத் ரயில் கட்டணம் குறைப்பு..? எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா?

 

வந்தே பாரத் ரயில்களின் குறிப்பிட்ட சேவையில், ரயில் கட்டணங்களை குறைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல் வந்தே பாரத் ரயில், ‘ரயில் 18’ என்ற பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த ரயிலின் சேவை புதுடெல்லி - வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தயாரிக்கப்பட்ட 23 வந்தே பாரத் ரயில்கள், பல்வேறு வழித்தடங்களில் தினமும் 46 சர்வீஸ்களாக இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்கள் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி செயல்பட்டு வருகின்றன. அதோடு மேலும் பல ரயில்கள் சென்னை ICF இல் தயாராகி வருகின்றன. அவை இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்க இயக்கப்பட உள்ளது. ஆனால் இதன் கட்டணம் தான் மற்ற ரயில்களை விட கொஞ்சம் கூடுதலாக இருந்து வருகின்றன.

அதனால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் தான் வந்தே பாரத் ரயில்களை தேர்ந்தெடுத்து பயணிக்கின்றனர். அல்லது அவசர காலத்தில் துரிதமாக பயணம் செய்யவேண்டும் என்ற தேவை ஏற்படும் போது வந்தே பாரத் பக்கம் போகின்றனர். பயணிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், சாதாரண மக்களும் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்க வேண்டும் என்பதற்காக புதிய அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, இந்திய ரயில்வே தற்போது வந்தே பாரத் ரயில் கட்டணத்தை ஒரு சில குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் கொண்ட வழித்தடங்களில் குறைக்க திட்டமிட்டுள்ளது. சாமானியர்களும் அணுகும் நோக்கத்துடன் இந்திய ரயில்வே இந்த முறையை அறிமுகம் செய்துள்ளது.

இந்தூர் - போபால், போபால் - ஜபல்பூர், நாக்பூர் - பிலாஸ்பூர் வழித்தடங்களில் மக்கள் ஏறும் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே இந்த வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் கட்டணம் முதலில் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. ஜூன் மாதத்தில் இந்தூர் - போபால் வழித்தடத்தில் மக்கள் பயணிக்கும் எண்ணிக்கை 29 சதவீதமாக இருந்தது. அதைவிட போபால் - இந்தூர் வழித்தடத்தில்  21 சதவீதமாக இருந்தது. நாக்பூர் - பிலாஸ்பூர் வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கை 55 சதவீதமாக இருக்கும்போது, ​​போபால் - ஜபல்பூர் வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கை 32 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது. எனவே,  வந்தே பாரத் ரயிலின் இந்த வழித்தடத்திற்கும் ரயில் கட்டணம்  குறைக்கப்பட உள்ளது.

தற்போது, ​​இந்தூர் - போபால் வந்தே பாரத் ரயில் டிக்கெட் விலை ஏசி நாற்காலி கார் ரூ.950 மற்றும் எக்ஸிகியூட்டிவ் நாற்காலி கார் ரூ.1,525 ஆகும். நாக்பூர் - பிலாஸ்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எக்சிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் ரூ.2,045 மற்றும் ஏசி நாற்காலி கார் கட்டணம் ரூ.1,075. போபால் முதல் ஜபல்பூர் வழித்தடத்தில் ஏசி நாற்காலி காருக்கு ரூ.1,055 மற்றும் எக்ஸிகியூட்டிவ் நாற்காலி காருக்கு ரூ.1,880 கட்டணம்.

குறைந்த பயணிகள் எண்ணிக்கைக்கான காரணம் அதிக கட்டணம். அதனால் தான் விலையைக் குறைக்க முதல் நடவடிக்கை வரைவு சமர்ப்பிக்கபட்டுள்ளது. அந்த வழித்தடத்தில் உள்ள தேவை மற்றும் சாலை மார்க்கமாக பயணிப்பதற்கான கட்டணத்தை ஆய்வு செய்த பிறகே வந்தே பாரத் ரயில் கட்டண மாற்றத்தை இந்திய ரயில்வே கொண்டுவர உள்ளன.

சில வழித்தடங்களில் 100 சதவீதத்திற்கும் அதிகமான பயணிகள் எண்ணிக்கை உள்ளது. காசர்கோடு - திருவனந்தபுரம் வழித்தடத்தில் 183 சதவீதம், ரிட்டர்ன் 176 சதவீதம், காந்திநகர் - மும்பை சென்ட்ரல் ரூட் 134 சதவீதம், ரிட்டர்ன் 129 சதவீதம், வாரணாசி - புது டெல்லி வழித்தடம் 128 சதவீதம், ரிட்டர்ன் 124 சதவீதம். இந்த இடங்களில் எல்லாம் ஏற்கனவே நிர்ணயிக்க பட்ட அதே பயண கட்டணம் தொடரும் என்று தெரிவைக்கப்பட்டுள்ளது.