மாணவியின் பாட்டிலில் சிறுநீர்.. பையில் லவ் லட்டர்.. கொந்தளித்த மக்கள்! ராஜஸ்தானில் பரபரப்பு

 

ராஜஸ்தானில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவி ஒருவரின் வாட்டர் பாட்டிலில் மாணவர்கள் சிறுநீரை நிரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பில்வரா மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் மாணவர்கள் சிலர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் வாட்டர் பாட்டிலில் தண்ணீருடன் சிறுநீரை கலந்து வைத்துள்ளனர். அத்துடன் ஒரு காதல் கடிதத்தையும் மாணவியின் பையில் போட்டுள்ளனர்.

வகுப்பறைக்கு திரும்பிய மாணவி, வாட்டர் பட்டிலை திறந்து குடிக்க முயன்றபோது துர்நாற்றம் வீசியதை கவனித்தார். அத்துடன் மாணவர்கள் சிலர் சிறுநீரை நிரப்பியதும் தெரியவந்தது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. இன்று பள்ளி மீண்டும் திறந்ததும் தாசில்தார் மற்றும் அப்பகுதியில் உள்ள லுகாரியா காவல் நிலையத்தில் தெரிவித்தும் தீவிரமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இதனால் மாணவியின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கொதித்தெழுந்தனர். குற்றம் செய்த மாணவர்களின் ஊருக்குள் புகுந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். தடுக்க சென்ற போலீசார் மீதும் கற்களை வீசி உள்ளனர். இதனால் அங்கு பதற்றம் உருவானது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர்.

இந்த வன்முறை போராட்டம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். “இதுவரை பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினர் எந்தப் புகாரையும் தெரிவிக்கவில்லை என்பதால், வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் காவல்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.