மின்சாரம் தாக்கி ரசிகர்கள் 2 பேர் பலி.. நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்காக பேனர் கட்டியபோது நேர்ந்த விபரீதம்!

 

நடிகர் சூர்யா பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மின்சாரம் தாக்கி 2 ரசிகர்கள் பலியான சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இந்த நிலையில், இன்று (ஜூலை 23) தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளுக்கு திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். தவிர, அவருடைய பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா பிறந்தநாளையொட்டி ஆந்திர மாநிலத்தின் மோபுரிவாரிபாலம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் பாபட்லா மாவட்டம் ஜே.பங்களூரைச் சேர்ந்த போளூரி சாய் ஆகியோர் தங்களது நண்பர்களுடன் நேற்று (ஜூலை 22) இரவு நரசாராவ்பேட்டையில் ஃப்ளெக்ஸ் பேனர்களைக் கட்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஃப்ளெக்ஸ் பேனர் ப்ரேமில் இருந்த இரும்புக் கம்பி அங்குள்ள மின்சார கம்பியில் மோதியதில் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து இது குறித்து நரசராவ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்தவர்களின் உடல்கள் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நரசராவ்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்கள் இருவரும் நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நரசராவ்பேட்டை ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒருவர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தால் ஏற்பட்ட ரசிகர்களின் மரணம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.