அரியானாவில் பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து... 7 பேர் பலி, 4 பேர் காயம்!!

 

அரியானாவில் பேருந்து மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் இருந்து இமாசலபிரதேச மாநிலத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 4.30 மணி அளவில் அரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தை ஓட்டுநர் ஓரமாக நிறுத்த முயன்றார். 

அப்போது லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்து மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. பின்னர் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். 

இதையடுத்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் உயிர் தப்பினர். லாரி ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து ஷாஜத்பூர் காவல் நிலைய அதிகாரி பீர் பஹான் கூறுகையில், லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று முன்னால் சென்ற பேருந்தின் மீது மோதியது. லாரி ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பேருந்தின் மீது மோதியதுள்ளார். இரு வாகன ஓட்டுநர்களும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர். விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.