சாலையில் கவிழ்ந்த தக்காளி லாரி.. பொதுமக்கள் அள்ளி செல்ல முயற்சி.. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

 

தெலங்கானாவில் தக்காளி லோடு லாரி கவிழ்ந்த விபத்தில் தக்காளியை பொதுமக்கள் அள்ளிச் செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் எப்போதும் விலை குறைவாக காணப்படும் தக்காளி இப்போது உச்சம் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் தக்காளி ஒரு கிலோ 130 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் சில இடங்களில் தக்காளி விலை கிலோ 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகியது. குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் தக்காளி விலை உச்சத்தை எட்டியுள்ளது. வட மாநிலங்களிலும் தக்காளி விலை உச்சத்தை எட்டியுள்ளது. பல இடங்களிலும் பவுன்சர்களைப் பாதுகாப்பிற்கு போட்டு தக்காளி விற்கும் சூழலும் நிலவியது.

இதனால் டெல்லியை சேர்ந்த தக்காளி வியாபாரிகள் தென்னிந்தியாவில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் கோலாரில் இருந்து 638 பெட்டிகளில் 16 டன் எடையுள்ள தக்காளியை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று டெல்லியை நோக்கி புறப்பட்டது.

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் மாவாள மண்டல் ஐதராபாத், நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த தக்காளி பெட்டிகள் சாலையில் விழுந்தன. இதனைக் கண்ட அந்த பகுதி பொதுமக்கள் சாலையில் விழுந்து கிடந்த தக்காளிகளை எடுத்துச் செல்ல முயன்றனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மாவால போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்தன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் துப்பாக்கியுடன் அங்கு வந்தனர். லாரியை சுற்றி நின்று தக்காளியை பொதுமக்கள் எடுத்துச் செல்லாதவாறு மாலை வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் மாற்று லாரி கொண்டுவரப்பட்டு தக்காளிப் பெட்டிகளை அதில் ஏற்றி பத்திரமாக டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் விஷ்ணுவர்தன் கூறுகையில், டெல்லியில் ஒரு கிலோ தக்காளி 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. லாரியில் கொண்டுவரப்பட்ட 16 டன் தக்காளி விலை ரூ.22 லட்சம் ஆகும். தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுவதால் தக்காளியை பொதுமக்கள் எடுத்துச் செல்லாதவாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அடிலாபாத் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.