கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளர்கள்... மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 பேர் பலியான சோகம்!!

 

மகாராஷ்டிராவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சோன்பெத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பௌச்சா தாண்டா பகுதியில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

அதிகாரியின் கூற்றுப்படி, வியாழக்கிழமை மதியம் ஒரு பண்ணையில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக 6 தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். தொட்டியை சுத்தம் செய்யும் போது அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு 5 தொழிலாளர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்றொரு தொழிலாளியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து சோன்பெத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார். விசாரணையில், இறந்தவர்கள் சாதிக் ஷேக் (58), அவரது 28 வயது மகன் ஷாருக், அவரது உறவினர் ஜுனைத் தாவூத் ஷேக் (32), அவரது சகோதரர் சபர் (21) மற்றும் மற்றொரு உறவினர் ஃபெரோஸ் கஃபர் ஷேக் (27) என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் சோன்பெத் தாலுகாவில் உள்ள பௌச்சா தாண்டாவில் வசிப்பவர்கள் என்பது தெரியவந்தது.

“வித்தல் ரத்தோட் என்பவர் வங்கியில் 4-ம் நிலை ஊழியராக பணிபுரியும் சுல்தானை தனது தாய் மாமாவின் பண்ணையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அழைத்தார்” என்று பர்பானி காவல்துறை கண்காணிப்பாளர் ராகசுதா தெரிவித்துள்ளார்.