போன்லெஸ் சிக்கனில் எலி... ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பகீர் வீடியோ!

 

மும்பையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் உணவில் சிக்கனுக்கு பதிலாக எலி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா பகுதியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பிரபல பஞ்சாப் தாபா ஸ்டைல் உணவகம் ஒன்றில் சிக்கன் கறியில் சிக்கனுக்கு பதிலாக இறந்து போன முழு எலி ஒன்று இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் குற்றம் சாட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதோடு அவர் அளித்த புகாரின் பேரில், உணவகத்தின் 2 சமையல்காரர்கள் மற்றும் மேனேஜர் மீது வழக்கு பதிவு செய்து, கடந்த திங்கட்கிழமை அன்று கைது செய்த போலீசார், செவ்வாய் அன்று அவர்களை ஜாமினில் விடுதலை செய்தனர். புகார் அளித்தவர்களுள் ஒருவர் அனுராக் சிங் என்ற மூத்த வங்கி அதிகாரி என்பதும் இன்னொருவர் அவரது நண்பர் அமீர் கான் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஆனால் ஹோட்டல் நிர்வாகமோ தங்கள் மீது வீண் பழி சுமத்தப்பட்டு இருப்பதாகவும் உணவகத்திற்கு வருகை தந்த இருவரும் குடி போதையில் இருந்ததாகவும் தங்களிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாகவும் கூறுகின்றன.

அதோடு பாதிக்கு மேல் சிக்கன் கறியை சாப்பிட்ட பிறகு அதில் எலி இருப்பதாக அவர்கள் தங்களிடம் பொய் கூறி பணம் அபகரிக்கும் நோக்கத்தில் தகராறு செய்ததாகவும் உணவகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க எண்ணியே இத்தகைய பொய் புகார் அளித்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.