திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டர் பைக்.. சுவரில் மோதி கோர விபத்து.. 2 இளைஞர்கள் பரிதாப பலி!

 

கேரளாவில் மோட்டர் சைக்களில் வந்த 3 பேர் சுவரில் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் மஞ்சாடி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு உன்னி கிருஷ்ணன் (25). இவரது நண்பர்கள் கிழக்கே பரம்பில் வீடு பகுதியை சேர்ந்த ஆசிப் அர்ஷத் (24), மஞ்சாடி புதுப்புறம்பு பகுதியை சேர்ந்த அருண்(25). இவர்கள் 3 பேரும் தங்களுடைய நண்பரின் திருமணத்திற்காக நேற்று வெளியூருக்கு சென்றிருந்தனர்.

திருமண விழா கொண்டாட்டங்கள் முடிந்து மூவரும் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் தங்களது ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். எர்ணாகுளம் மாவட்டம் கச்சேரிப்பாடி பகுதியில் இன்று அதிகாலை வந்த போது, அங்கிருந்த சுவரில் அவர்களது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். 

மூன்று வாலிபர்கள் படுகாயமடைந்து சாலையில் கிடந்ததை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பார்தது போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த விபத்தில் விஷ்ணு உன்னி கிருஷ்ணன் மற்றும் ஆசிப் அர்ஷத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

படுகாயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்த அருணை, போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த 2 வாலிபர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.