10-ம் வகுப்பு மாணவனுடன் போட்டோ ஷூட் நடத்திய தலைமை ஆசிரியை.. கர்நாடகாவில் பரபரப்பு!

 

கர்நாடகாவில் கல்விச் சுற்றுலா சென்ற 10-ம் வகுப்பு மாணவனுடன் பள்ளி தலைமை ஆசிரியை போட்டோ ஷூட் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் முருகமல்லா கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். அந்த மாணவர்களோடு சென்ற பள்ளியின் தலைமை ஆசிரியை புஷ்பலதா, அதே பள்ளியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஒருவனோடு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் மிகவும் நெருக்கமான முறையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். மேலும் இது தொடர்பாக கல்வி அதிகாரி உமாதேவியிடம் சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவன் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையை தொடர்ந்து கல்வி அதிகாரி உமாதேவி அளித்த அறிக்கையின் அடிப்படையில், தலைமை ஆசிரியை புஷ்பலதாவை சஸ்பெண்டு செய்து சிக்காபல்லாபூர் மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.