ஆளுநர் சூப்பர் முதல்வர் ஆக முடியாது.. உச்சநீதிமன்றத்தில் கடும் வாதம்!!
ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஒன்றிய அரசு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் வாதங்களுக்கு எதிரான வாதங்களை எடுத்து வைத்தார்.
மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்குஅனுப்புவதாக இருந்தாலும் அமைச்சரவையின் ஆலோசனைப்படியே செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. ஆளுநர் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். அதேபோல, மாநில அரசை கட்டுப்படுத்தும் சூப்பர் முதல்வராகவும் ஆளுநர் இருக்க முடியாது. ஆளுநரும், முதல்வரும் இருமுனை கத்திகள் போல எதிர் எதிர் துருவங்களாக செயல்பட முடியாது என்று அபிஷேக் மனு சிங்வி கூறினார்.
மத்திய அரசின் சட்டத்துடன் முரண்படும் மசோதாவை மாநில அரசு மறுநிறைவேற்றம் செய்து அனுப்பினால், அதை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்ப முடியாதா? என்ற தலைமை நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்தவர், மறுநிறைவேற்றம் செய்யப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க முடியாது. மசோதாவை ஆளுநர் ஆராயவும் முடியாது. அது அவரது வேலை அல்ல. மாநில அரசு சரியான மசோதாவைத்தான் கொண்டு வரும். ஒருவேளை அது முரண்பட்டு இருந்தால், சரிசெய்ய நீதிமன்றங்கள் உள்ளன. அந்த மசோதா முரண்பாடாக இருக்கிறது என்றால் அதை முதல்முறையே குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்பலாம். என்று தெரிவித்தார்.
விசாரணை செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.