கேரளாவில் மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த தந்தை.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!!

 

கேரளாவில் தடுப்பணையில் குளிக்க சென்ற தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கொட்டியூர் அருகே உள்ள கேளகம் பகுதியில் வசித்து வந்தவர் லிஜோ ஜோஸ் (33). அவரது மகன் நெபின் ஜோசப் (6). நெபின் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளார். நேற்று லிஜோ ஜோஸ் தனது மகனுக்கு நீச்சல் சொல்லிக் கொடுப்பதற்காக அருகில் உள்ள பாவலிப் புழா ஆற்றுக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் பாவலிப் புழா ஆற்றில் உள்ள தடுப்பணையில் குளித்து வந்த நிலையில், லிஜோ ஜோஸ் தனது மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத நெபின் ஜோசப் சகதியில் சிக்கிக்கொண்டான். உடனே அவனை காப்பாற்ற லிஜோ ஜோஸ் முயற்சித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவரும் சகதியில் சிக்கிக்கொண்டார். 

இரண்டு பேரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அந்த பகுதியினர் விரைந்து சென்றனர். பின்னர் 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லிஜோ ஜோசும், நெபின் ஜோசப்பும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லிஜோ ஜோஸின் மனைவி ஸ்டெபனா குவைத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஷிவானியா என்ற நான்கு வயது மகள் இருக்கிறார்.