பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை.. புதுச்சேரியில் பரபரப்பு!

 

புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்தவர் பரத் (32). இவர் பெரியகடை காவல் நிலையத்தில் ரவுடிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள. அதனால் இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருகின்றது. அன்னமையில் இவர் சிறைக்கு சென்ற நிலையில் ஜாமீனில் வெளிவந்துள்ளார். பிரபல ரவுடியான இவர் கடந்த சில மாதங்களாக புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். 

இந்நிலையில் இன்று காலை புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஸ்டாண்டு ஒட்டிய பகுதியில் பரத் நின்று அங்கிருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களான வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 7 பேர் கொண்ட கும்பல், பரத்தை கொலை செய்ய முயன்றது. ஆனால் பரத் அவர்களிடம் சிக்காமல் இருப்பதற்காக அங்கிருந்து ஓட தொடங்கினார். ஆனால் அந்த ரவுடி கும்பல் அவரை விடாமல் ஓடஓட விரட்டிய தலையில் சரமாரி அரிவாளால் வெட்டியது.

இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அந்த ரவுடி கும்பல் அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்று தலைமறைவாகி விட்டது. புதிய பேருந்து நிலையம் அருகே மக்கள் அதிக நடமாட்டமுள்ள பகுதியில் பட்டப்பகலில், நடந்த துணிகர கொலையால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்த ரவுடி பரத்தின் உடலை பார்வையிட்டனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்ட நிலையில் அது சம்பவ இடத்திலிருந்து சிறிதுதூரம் ஓடிநின்றது. அந்த இடத்தில் சிதறிக் கிடந்த ரவுடியின் செருப்பு உள்ளிட்ட சில தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

பின்னர் பரத் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகள் தொடர்பாக நடத்திய முதல்கட்ட விசாரணையில், பரத்துக்கு கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்த சிலருடன் முன்விரோதம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கொலையாளிகளை அடையாளம் காணவும், அவர்களை கைது செய்யவும் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.