கணவன் காலைக் கவ்விய முதலை... முதலையின் கண்ணில் குச்சியை விட்டு ஆட்டிய சிங்கப் பெண்!!

 

ராஜஸ்தானில் முதலையிடம் சிக்கிய கணவனைக் காப்பாற்றிய மனைவிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் கரவுலி மாவட்டத்தில் உள்ள மந்தராயல் பகுதியில் வசித்து வருபவர் பன்னே சிங். இவரது மனைவி விமல் பாய். பன்னே சிங் ஆடுகள் மேய்த்து பிழைப்பு நடத்தி வருகின்றார். இந்த நிலையில் கடந்த செவ்வாயன்று, பன்னே சிங்கும் அவரது மனைவியும் தங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் கொடுக்க சம்பல் ஆற்றுக்குச் சென்றனர்.

பன்னே சிங் ஆற்றில் இறங்கியபோது, திடீரென ஒரு முதலை வந்து அவரது காலை கடித்து தண்ணீருக்குள் இழுக்க முயன்றது. சற்று தொலைவில் இருந்த விமல் பாய் கணவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தார். அவர் தைரியமாகச் சென்று கணவனின் காலை விடுவிப்பதற்காக முதலையைத் தடியால் அடித்தார்.

ஆனாலும், முதலை விடவில்லை. இன்னும் தண்ணிருக்கு உள்ளே இழுக்க முயன்றது. மேலும் தைரியத்துடன் விமல் பாய் முதலையின் கண்ணில் குச்சியால் குத்தினார். இதனால், முதலை தனது பிடியை விட்டு பன்னே சிங்கின் காலை விடுவித்தது. இதையடுத்து கணவன், மனைவி இருவரும் பத்திரமாக கரைக்கு வந்தனர்.

தனது கணவரை முதலை கடித்தபோது, தன் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவில்லை என விமல்பாய் தெரிவித்துள்ளார். தற்போது இவரது இந்த சாகசம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விமல் பாயின் சாகசத்திற்கு பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.