திருமண மேடையில் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட்ட மணபெண்.. கலக்கத்தில் மணமகன்!!

 

உத்தர பிரதேசத்தில் மணப்பெண் ஒருவர் திருமண மேடையில் துப்பாக்கியை எடுத்து சுடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் சலீம்பூர் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், மணமக்கள் ஜோடியாக அமர வைக்கப்பட்டு உறவினர்கள் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். அப்போது, நபர் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை மணமகளின் கையில் கொடுத்து உள்ளார். அதனை வாங்கிய மணமகள், என்ன ஏது என்று யோசிக்காமல், துப்பாக்கியை மேலே பிடித்தபடி, வானை நோக்கி 4 ரவுண்டு சுட்டு உள்ளார். அவரருகே அமர்ந்திருந்த மணமகன் சப்தமின்றி அமைதியாக காணப்பட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், அப்புறமென்ன...? இனி மணமகளின் அன்புக்கு கட்டுப்பட்டவராக, அவரை நன்றாக கவனித்து கொள்பவராக மாமியார் மாறி விடுவார் என தெரிவித்து உள்ளார்.

எனினும், இந்த வீடியோ வைரலானதால், ஹத்ராஸ் ஜங்சன் போலீசார் மணமகள் மீது வழக்கு ஒன்றை பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இதனால், தேனிலவுக்கு செல்ல வேண்டிய மணமகள் தலைமறைவாகி விட்டார். இதனால் மணமகன் சோகத்தில் மூழ்கி விட்டார்.

ஹத்ராஸ் ஜங்சன் காவல் உயர் அதிகாரி கிரீஷ் சந்த் கவுதம் கூறுகையில், துப்பாக்கி உரிமம் வைத்திருந்த நபர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கொண்டாட்டத்திற்காக இதுபோன்று துப்பாக்கி சூடு நடத்துவோர் மற்றவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கிறார்கள்.