மணமேடையில் மணமகள் திடீர் மரணம்..! மணமகளின் தங்கையை மணந்த மாப்பிள்ளை!

 

குஜராத்தில் திருமணத்தின் போது திடீரென மணமகள் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில் மணமகளின் தங்கையை மணமகனுக்கு திருமணம் முடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சுபாஷ் நகர் பகுதியில் கடந்த 24-ம் தேதி திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. ரத்தோர் என்பவரின் மகள் ஹீதலுக்கும் ராணா பாய் என்பவரின் மகன் விஷாலுக்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள்தான் மணமகள் ஹீதலுக்கு இறுதி நாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இரு வீட்டாரும் மும்முரமாக திருமண சடங்குகளில் ஈடுபட்டிருந்தனர். மணமக்கள் உற்சாக திருமண சடங்குகளை செய்து வந்தனர். உறவினர்களின் பாட்டு நடனம் என குதூகலமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மணமகள் மயங்கி சரிந்தார். இதையடுத்து பதற்றம் அடைந்த மணமகளின் பெற்றோர் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஹீதலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

மணமகள் குடும்பத்திற்கு இது பேரிடியாக அமைந்தது. இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட உறவினர்கள் இந்த திருமணம் நின்று விடக்கூடாது என்று எண்ணி பெண் வீட்டாரிடம் பேசி பெண்ணின் தங்கையையே மணமகனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோரிடம் பேசினர். இதையடுத்து பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். 

இதையடுத்து இறந்த மணமகளின் உடலை பாதுகாத்து வைத்துவிட்டு திருமணத்தை நடத்தி முடித்தனர். திருமணம் முடிந்த பிறகு இறந்த பெண்ணின் உடலுக்கான இறுதிச் சடங்குகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.