விஷ ஊசி போட்டு தஞ்சாவூர் பெண் மருத்துவர் தற்கொலை.. பெங்களூருவில் அதிர்ச்சி!

 

கர்நாடகாவில் விஷ ஊசி செலுத்தி கொண்டு தஞ்சாவூரை சேர்ந்த பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நாராயணா ஹெல்த் சிட்டி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில், தமிழ்நாட்டின் தஞ்சாவூரை சேர்ந்த ஆர்த்தி (29) என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆரத்தி வழக்கம் போல் மருத்துவமனைக்கு வேலைக்கு வந்திருந்தார். வேலை முடிந்ததும் தன்னுடைய அறைக்கு ஓய்வெடுக்க ஆரத்தி சென்றிருந்தார்.

அதன்பிறகு, அவர் நீண்ட நேரமாக அறையை விட்டு வெளியே வரவில்லை. மருத்துவமனை ஊழியர் வந்து பார்த்த போது தான் கழிவறைக்குள் டாக்டர் ஆரத்தி பிணமாக கிடந்தார். அவரது உடலுக்கு அருகில் ஊசி போட பயன்படும் சிரிஞ்சி கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஹெப்பகோடி போலீசார், ஆரத்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது ஆரத்தி விஷ ஊசி செலுத்தி கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் செலுத்தி கொண்ட மருந்து எந்த மாதிரியான மருந்து என்பது? தெரியவில்லை. இதையடுத்து, ஊசி மற்றும் சிரிஞ்சி ஆகியவை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்த பிறகு தான் எந்த மாதிரியான மருந்தை ஆரத்தி செலுத்தி கொண்டு தற்கொலை செய்தார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

அதே நேரத்தில் டாக்டர் ஆரத்தி தற்கொலைக்கான சரியான காரணம் என்ன? என்பதும் தெரியவில்லை. அதுகுறித்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆரத்தியின் செல்போனையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து ஹெப்பகோடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.