தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி!! வெளியான மருத்துவமனை அறிக்கை

 

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வயிற்று வலி காரணமாக அவதிபட்டு வந்துள்ளார். இதையடுத்து, இன்று காலை கச்சிபௌலியில் உள்ள ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜி (ஏஐஜி) மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் வயிற்றில் புண் இருப்பதை கண்டறிந்தனர். இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் சந்திரசேகர் ராவ் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது. கேசிஆரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவுக்கு இன்று காலை வயிற்று வலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி அவரை பரிசோதித்தார். 

அவர் AIG மருத்துவமனைக்கு கொண்டு வரபட்டு சிடி ஸ்கேனும் எண்டோஸ்கோபியும் செய்யப்பட்டது. அதில், அவரின் வயிற்றில் ஒரு சிறிய புண் கண்டறியப்பட்டது. அதற்கு மருத்துவ ரீதியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மற்ற உடல் அளவுருக்கள் இயல்பாக உள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. இதனிடையே தெலுங்கானா முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.