ஓடும் ரயிலில் இருந்து குதித்து வாலிபர் தற்கொல.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்

 

கர்நாடகாவில் ஓடும் ரயிலில் இருந்து இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிவமொக்கா டவுன் பி.எச்.சாலையில் நேற்று காலை 10.30 மணியளவில் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் துங்கா ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயிலில் இருந்து இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்தார். இதைக் கண்ட பயணிகள் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த துங்கா நகர் போலீசார், ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்டனர். ஆற்றில் தண்ணீர் வற்றியதால் உயரத்தில் இருந்து ஆற்றில் குதித்த அவருக்கு தலையில் பலத்த அடிபட்டுள்ளது. இதனால், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தற்கொலை செய்து கொண்ட இளைஞர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவில்லை. தற்போது இளைஞரின் சடலம் சிவமொக்கா மெகன் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த துங்கா நகர் போலீசார், இளைஞரின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.