கிரிக்கெட் விளையாடும் போது மயங்கி விழுந்து இளைஞர் பரிதாப பலி.. புதுச்சேரியில் சோகம்!

 

புதுச்சேரியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் பாக்கமுடையான்பேட் முல்லை நகர் பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவரது மனைவி ராதிகா. இந்த தம்பதியரின் மகன் கிஷோர் (23). இவர் பி.டெக்., படித்துள்ளார். இன்று காலை நண்பர்களுடன் லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை அவருடன் விளையாடிக் கொண்டிருந்த சக நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் கிஷோர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் இளைஞர் உயிரிழந்தது குறித்து அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கிஷோர் சில தினங்களில் வெளிநாடு செல்ல உள்ள நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.