ஹோட்டலில் பையில் திணித்து வைக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்..  இமாசல பிரதேசத்தில் பயங்கரம்

 

இமாசல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இளம்பெண் கொலை செய்து பையில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இமாசல பிரதேச மாநிலம் மணாலி நகரில் ஓட்டல் ஒன்றில் 26 வயது இளம்பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடந்த திங்கட்கிழமை அறை எடுத்து தங்கியுள்ளனர்.  இந்த நிலையில், நேற்று மாலை போலீசாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஹோட்டல் பணியாளர், ஹோட்டலில் இருந்து பெரிய பை ஒன்றை எடுத்து கொண்டு நபர் ஒருவர் வாகனத்தில் செல்கிறார். அது சந்தேகம் எழுப்புகிறது என கூறியுள்ளார்.  

இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரெண்டு கே.டி. சர்மா உத்தரவின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.  இதனை தொடர்ந்து, சம்பவ பகுதிக்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர்.  அப்போது, ஹோட்டலுக்கு வெளியே இருந்த பையை திறந்து பார்த்தபோது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த பெரிய பையில், இளம்பெண்ணின் உடல் இருந்துள்ளது.  குற்றவாளி ஹோட்டலில் இருந்து தப்பி விட்டார்.  இதனை தொடர்ந்து நடந்த முதல்கட்ட விசாரணையில், குற்றவாளியின் புகைப்படங்களோ அல்லது வேறு ஆவணங்களோ போலீசாருக்கு கிடைக்கவில்லை.

அந்த ஹோட்டலில், இளம்பெண்ணின் பெயரில் அறை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.  இதன்பின் தீவிர விசாரணை செய்து குற்றவாளியை இன்று கைது செய்தனர். இந்த விவகாரத்தில் கொலை (பிரிவு 302) வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த பெண்ணுக்கும், இந்த நபருக்கும் இடையேயான தொடர்பு மற்றும் கொலைக்கான பின்னணி ஆகியவை பற்றி தெரியவரவில்லை.  போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.