90 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தமிழர்.. 50 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்பு.. கேரளாவில் சோகம்!

 

கேரளாவில் கிணறு சீரமைப்புப் பணியின் போது மண் சரிந்து தமிழர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன் (55). இவர், கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் முகோலா பகுதியைச் சேர்ந்த சுகுமாரன் என்பவருக்கு சொந்தமான 90 அடி ஆழ கிணற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.


கிணற்றில் கான்கிரீட் வளையம் அமைத்த போது, எதிர்பாராத விதமாக மண் சரிந்து விபத்துக்குள்ளானது. இதில் கிணற்றுக்குள்ளிருந்த மகாராஜன் மீது மண் சரிந்து மூடியுள்ளது. கிணற்றின் மேலே இருந்த மணிகண்டன் உள்ளிட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பொதுமக்கள் உதவியுடன் மகாராஜனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் முதல் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

நேற்றிரவு சிறிது நேரம் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், அதிநவீன இயந்திரங்கள் மூலம் மீண்டும் பணிகள் தொடங்கியது. எனினும், முதியவரின் நிலை என்னவென்று தெரியவில்லை. 50 மணி நேரத்தை கடந்தும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மகாராஜன் மீட்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.