மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. மனைவி மற்றும் குழந்தைகளை கொன்ற கணவன்.. உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்

 

உத்தரபிரதேசத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் பிஜினூர் பகுதியை சேர்ந்தவர் ராம் லகன் (32). இவரது மனைவி ஜோதி (30). திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதிக்கு பயல் (6), ஆனந்த் (3) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே, மனைவி ஜோதியின் நடத்தையில் ராம் லகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஜோதி வேறொரு நபருடன் தொடர்பில் இருப்பதாக ராம் நினைத்துள்ளார். மேலும், ஜோதி தனது செல்போனில் பேசும்போது அதை ராம் லகன் ஒட்டுக்கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ராம் கடந்த 28-ம் தேதி இரவு மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ராம் தனது மனைவி ஜோதியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். குழந்தைகள் கண்முன்னே மனைவியை ராம் கொலை செய்துள்ளார்.

மனைவியை கொலை செய்ததை குழந்தைகள் வெளியே கூறிவிடலாம் என்று அச்சத்தில் தனது 2 குழந்தைகளையும் ராம் கொலை செய்துள்ளார். பின்னர் 3 பேரின் உடலையும் மறைவான இடத்திற்கு கொண்டு செல்ல ராம் திட்டமிட்டுள்ளார். ஆனால், மக்கள் நடமாட்டம் காரணமாக உடல்களை வீட்டை விட்டு வெளியே கொண்டு செல்லமுடியவில்லை.

இதனால், கொலை செய்யப்பட்ட மனைவி, 2 குழந்தைகளின் உடலை வீட்டிலேயே வைத்து உடல்களுடன் ராம் 3 நாட்கள் உறங்கியுள்ளார். ஆனால், கொல்லப்பட்டு 3 நாட்கள் ஆனதால் உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இது ராம் தங்கியுள்ள வாடகை வீட்டின் கீழ் வசித்துவரும் வீட்டின் உரிமையாளர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு ஜோதி, அவரது 2 குழந்தைகள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவி, 2 குழந்தைகளை கொலை செய்த ராமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.