நடத்தையில் சந்தேகம்.. மண் வெட்டியால் வெட்டி மனைவி கொலை.. கணவன் வெறிச்செயல்!

 

கர்நாடகாவில் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மண் வெட்டியால் வெட்டி அவரது கணவர் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் டி கோட்டா தாலுகாவில் உள்ள ஹூபனூர் தாண்டா பகுதியைச் சேர்ந்தவர் அசோக் ரத்தோட் (33). இவருக்கும் ரேஷ்மா என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக, தன் மனைவி முறைகேடான உறவு வைத்திருப்பதாக அசோக் சந்தேகப்பட்டார். இந்த பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குடித்து விட்டு வந்து அடிக்கடி தனது மனைவியுடன் அசோக் ரத்தோட் தகராறு செய்து வந்தார்.

இதனால் அசோக் ரத்தோட் துன்புறுத்தலைத் தாங்க முடியாமல் கோபித்துக் கொண்டு ஹூபனூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஷீலா சென்று விட்டார். அங்கு சென்று அவரை சமாதானப்படுத்தி தனது வீட்டிற்கு அசோக் ரத்தோட் அழைத்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு மது போதையில் வந்த அசோக் ரத்தோட், உறங்கிக் கொண்டிருந்த தனது மனைவி ஷீலாவை மண்வெட்டியால் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ஷீலா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று ஷீலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இக்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அசோக் ரத்தோட்டை தேடி வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.