திடீர் உடலநலக் குறைவு.. எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி!

 

பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானி உடல்நலக் குறைவு காரணமாக இரவு நேரத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சியில் பிறந்த அத்வானி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன தலைவர்களுள் ஒருவர். ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் இயக்கமான பாஜகவை வாஜ்பாயுடன் இணைந்து தொடங்கிய அவர், பாஜகவில் மிகப்பெரும் பொறுப்புகளை வகித்துள்ளார். பாஜகவின் அகில இந்திய தலைவராக நீண்டகாலம் பணியாற்றி உள்ளார். அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரை முடிவில், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அத்வானி, அமைச்சராகவும் துணை பிரதமராகவும் பதவி வகித்தார். 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார் அத்வானி. 2015-ம் ஆண்டு எல்.கே.அத்வானிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. அண்மையில் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அத்வானிக்கு வழங்கப்பட்டது.

தற்போது அரசியலில் இருந்து விலகி இருக்கும் அவருக்கு சிறுநீரகம் தொடர்பான உபாதை காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகவியல் துறை நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருடைய நிலைமை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.