பஞ்சாப் ராணுவ முகாமில் திடீர் துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி! பயங்கரவாத தாக்குதலா?

 

பஞ்சாபில் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் அதிகாலை 4.30 மணிக்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஏதேனும் பயங்கரவாத செயலா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணையை ராணுவம் தொடங்கியுள்ளது. விரைவு நடவடிக்கைக் குழு தீவிரப்படுத்தப்பட்டு ராணுவ முகாமிற்குள் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ராணுவ முகாமில் நடைபெற்றது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்று பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது. பஞ்சாப் ராணுவ முகாமில் இரண்டு நாட்களுக்கு முன்பாக 28 குண்டுகளுடன் துப்பாக்கி மாயமாகி இருந்த நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. பதிண்டா ராணுவ கண்டோன்மெண்ட் வாயிற்கதவுகள் மூடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர்.