மணல் கடத்தலை தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்.. டிராக்டரை ஏற்றிக் கொலை செய்த 2 பேர் கைது

 

மத்தியப் பிரதேசத்தில் சப்-இன்ஸ்பெக்டரை மணல் மாபியா கும்பல் டிராக்டர் ஏற்றிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் சாஹ்தோல் மாவட்டத்தில் உள்ள பியோஹரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மஹேந்திரா பக்ரி. இவர், தன்னுடன் பணியாற்றும் சக காவல்துறை அதிகாரிகள் இருவருடன், குற்றவாளி ஒருவரை கைது செய்வதற்காக நேற்று நள்ளிரவில் படோலி கிராமப்பகுதி வழியாக தங்களது வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அவர்கள் எதிரே மணல் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வேகமாக வருவதைக் கண்டதும், அந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்த அவர்கள் முயன்றுள்ளனர். ஆனால், காவலர்களைக் கண்டதும், டிராக்டரை அதிவேகமாக இயக்கிய அதன் டிரைவர், தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை அதிகாரி மஹேந்திரா பக்ரி மீது டிராக்டரை ஏற்றிச் சென்றுள்ளார். 

இதில் மஹேந்திரா பக்ரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், டிராக்டர் ஓட்டுநர் ராஜ் ராவத், அவருடன் பயணித்த அஷுடோஷ் சிங் ஆகிய இருவரைக் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டரின் உரிமையாளர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.