ஆன்லைன் கேம் பாஸ்வேர்டை பகிராத மாணவர்.. ஆத்திரத்தில் கொலை செய்து சடலத்தை எரித்த நண்பர்கள்!

 

மேற்கு வங்கத்தில் ஆன்லைன் விளையாட்டின் பாஸ்வேர்டை பகிராத மாணவரை அவரின் நண்பர்களே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பை தாஸ். இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் ஆன்லைனில் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்காக விளையாட்டுக்கு பணம் செலுத்தி பிரத்யேக பாஸ்வேர்ட் ஒன்றையும் பெற்றுள்ளார். இது குறித்து பாப்பை தாஸ் தனது நண்பர்களிடமும் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரின் நண்பர்களும் அந்த பாஸ்வேர்டை தங்களுக்கும் கொடுக்குமாறு கேட்டு உள்ளனர். ஆனால், அதற்க்கு பாப்பை தாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கும் அவரின் நண்பர்களுக்கும் இது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் அடிதடியாக மாறிய நிலையில், அவரின் நண்பர்கள் தாக்கியதில் பாப்பை தாஸை அடித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் பெட்ரோல் கொண்டு பாப்பை தாஸின் உடலை எரிக்க முயன்று இருக்கின்றனர். பின்னர், பாதி எரிந்த உடலை அவர்கள் அங்கிருந்த கால்வாயில் வீசிவிட்டு சென்றுள்ளனர். மகன் காணாமல் போனது குறித்து பாப்பை தாஸின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, பாப்பை தாஸின் சடலத்தில் இருந்த டாட்டுவை வைத்து அவரை அடையாளம் கண்ட போலீசார், பின்னர் நடத்திய விசாரணையில் அவரின் நண்பர்களே அவரை கொலை செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரின் நண்பர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.