மாரடைப்பால் உயிரிழந்த மகன்.. இறந்த செய்தியை கேட்ட தாயும் மரணம்.. தெலுங்கானாவில் சோகம்!

 

தெலுங்கானாவில் மகன் இறந்த செய்தியை கேட்ட தாய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் மெடக் மாவட்டத்தில் உள்ள குச்சன்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (57). இவரது மகன் நரசிங்க கவுட் (36). இவர், வாடகைக்கு கார் ஒன்றை ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று (ஜன. 6) அதிகாலை நரசிங்க கவுட் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ச்சி அடைந்த நரசிங்க கவுட்டின் மனைவி, உடனே அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, மகன் இறந்த செய்தியை வீட்டில் இருந்த தாய் லட்சுமியிடம் கூறியபோது அதிர்ச்சி அடைந்து திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

உடனே, அங்கிருந்தவர்கள் லட்சுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மகன் இறந்த செய்தியை கேட்டு தாயும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.