ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி.. குழந்தையை காப்பாற்ற முயன்றபோது சோகம்!

 

கர்நாடகாவில் குழந்தையை காப்பாற்ற முயன்றபோது ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியை சேர்ந்தவர் நசீர் அகமது (40). இவருக்கு திருமணமாகி அல்பியா (10), மோகின் (6) என இரு குழந்தைகள் உள்ளனர். அதேபோல், நசீரின் தங்கை ரேஷ்மா உனிஷா (38) இவருக்கு திருமணாகி இப்ரா (15), அபெட் (12) என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் நசீர் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் தங்கை ரேஷ்மா அவரது குழந்தைகள் என மொத்தம் 8 அழைத்துக்கொண்டு உத்தரகன்னடாவில் உள்ள காளி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.  

6 பேர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது ஒரு குழந்தை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதையடுத்து எஞ்சிய 5 பேரும் குழந்தையை காப்பாற்ற முயன்றுள்ளனர். இதில் அந்த குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் நீரில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினர் ஆற்றில் மூழ்கிய 6 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.